வெள்ளி, 15 ஜனவரி, 2010

என் அரையாண்டு விடுமுறை அனுபவங்கள் ....

(என் அரையாண்டு விடுமுறை 24.12.2009 - 3.1.2010 வரை )

23. 12. 2009 அன்று மாலை ஹாஸ்டலில் இருந்து வீட்டிற்கு வந்தேன். அக்காவைப் பார்த்ததும் ஒரே சந்தோசம் . நான் வந்தாலே அவளுக்கு பயம் வந்துவிடும். ஏன்னென்றால் நான் அவளை அடித்துக்கொண்டே இருப்பேன். அன்று இரவு டிவி பார்த்து பொழுதை கழித்தேன் . அன்று மட்டும் அல்ல, என்னைக்கும் எனக்கு டிவி தான் ஏன்னா ஹாஸ்டல்ல டிவி இல்ல. ஒரு பாட்டுக் கூட கேட்க முடியாது. அம்மா என்னை பார்க்க வந்தால் அவங்க செல்போன்ல பாட்டு கேட்பேன் நல்ல பாட்டா செல் போன்ல ஏத்திகிட்டு வர சொல்லுவேன். அதனால தான் வீட்டுக்கு வந்த உடன் டிவி பார்க்கிறேன். எனக்கு எழுதும் ஆர்வம் முன்பு இருந்தது. கொஞ்ச வருஷம் டிவி பார்த்தே பொழுத கழிச்ச்சதனால எழுதும் ஆர்வம் குறைந்தது. ஆனால் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க எழுது சொர்ணான்னு. இப்பவும் அப்படித்தான் சொன்னாங்க எனக்கு என்ன எழுதறதுன்னு தெரிலன்னு சொன்னேன். அரையாண்டு விடுமுறைல நீ என்னன்னா செஞ்சன்னு எழுதிவைன்னு சொன்னாங்க.

என்னடா இது ஜாலியா இருக்கலாம்னு வீட்டுக்கு வந்தா அம்மா எழுத சொல்றாங்கலேன்னு கஷ்டமா போச்சு. இதுக்கு முன்னாடி நான் எழுதன கட்டுரையெல்லாம் அம்மா ஆர்வமா படிப்பாங்க . என் எழுத்துக்கள் என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் .நான் நல்லா எழுதுவேன்னு எல்லார்க்கிட்டயும் சொல்லுவாங்க ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு தானே ) இப்பக்கூட அம்மா எழுத சொல்றாங்கன்னு தான் கிறுக்குறேன்.

இன்னிக்கு எழுதுறேன், நாளைக்கு எழுதுறேன்னு அம்மாவ ஏமாத்தி ஏமாத்தி எனக்கு வேண்டியது வாங்கிக்குவேன். அம்மாவும் புள்ள எழுத போறான்னு நான் கேட்டத எல்லாம் வாங்கி கொடுப்பாங்க. எனக்கு எழுதணும்ன்னு ஆசைதான் டிவி , கம்ப்யூட்டர் இருக்கும் போது எழுத மனசு வருமா ? அதையே தான பாக்கணும்ன்னு தோணும். நீங்களே சொல்லுங்க.

ஆனாலும் அரையாண்டு விடுமுறையில் வைக்கம் முகமது பஷீர் எழுதிய "இளம் பருவத்து தோழி'' யை படித்தேன். ( இந்த கதையைப் பற்றி இன்னொருக் கட்டுரையில் சொல்கிறேன் ) ஜெயகாந்தன் எழுதிய 3 சிறுகதைகள் படித்தேன்.
1. அக்னி பிரவேசம்
2. நந்தவனத்தில் ஒரு ஆண்டி
3. அந்தரங்கம் புனிதமானது
மீதி கதைகளை பொங்கல் விடுமுறையில் படித்து விடவேண்டும்.

24.12.2009 அன்று எங்கள் ஊர் அருகே உள்ள தாதம்பட்டிக்கு அம்மா, அக்காவுடன் சென்றேன். அன்று ''பெரியார்'' நினைவு நாள் தாதம்பட்டியில் தான் பெரியாரின் பாட்டி வீடு இருந்தது. அவர் மனைவி நாகம்மை அம்மாவின் வீடும் அங்கு தான் இருந்தது. இப்போது பெரியாரின் சில உறவினர்கள் அங்குதான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து பேசிவிட்டு வந்தோம். தாதம்பட்டியில் தான் பெரியார் தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே இரவில் வெட்டி சாய்த்தார்.
( பெரியார் - அஜயன்பாலா பக். 50 )
இது அரையாண்டு விடுமுறையில் கிடைத்த முதல் அனுபவம் .

26.12.2009 அன்று மேச்சேரி அருகே ஏர்வாடி என்ற கிராமத்தில் நடந்த கலை விழாவிற்கு நான், என் அம்மா, அக்கா மூவரும் சென்றோம். முனைவர் கே. ஏ. குணசேகரன் , எடிட்டர் லெனின், நாஞ்சில் நாடன் போன்றோர் எல்லாம் வந்து இருந்தார்கள் . அங்குதான் நான் என் வாழ்கையில் முதல் முதலாக
பொம்மலாட்டத்தையும், தெரு கூத்தையும் கண்டு ரசித்தேன். அந்நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஈழத்து தமிழ் சகோதிரிகள் இருவரை அங்கு சந்தித்தேன். நண்பர்களாகிவிட்டோம் . அரையாண்டு விடுமுறையில் இது இரண்டாவது அனுபவம்.

அம்மாகிட்ட வேட்டைக்காரன் படத்துக்கு கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன். அதுக்கு அம்மா உன் புத்தி ஏன் இப்படி போகுது உனக்கு ரசனையே இல்லன்னு திட்டினாங்க. சி.டியாச்சும் வாங்க காசு குடுங்கன்னு கெஞ்சி கூத்தாடி சி.டி வாங்கி பார்த்தேன். படம் பார்த்த பின்னாடி தான் அம்மா சொன்னது எவ்வளவு பெரிய உண்மைன்னு தெரிஞ்சது .

டிவி இல்லனா கம்ப்யூட்டர் - ரெண்டையும் அம்மா ஆப் பண்ணிட்டாங்கனா செல்போன் ல பாட்டு கேட்பேன். அது இல்லன இது ஏதாவது ஒரு சவுண்ட் வீட்ல கேட்டுகிட்டே இருக்கணுமான்னு அம்மா சத்தம் போடுவாங்க.

இதுமேல எங்க தாத்தா எப்பபார்த்தாலும் டிவி பார்க்கறதும் , நெட்ட நெட்டுக்கிட்டு பார்க்கறதும் வேலையா போச்சின்னு திட்டுவாரு. ஹாஸ்டல்ல நிம்மதி இல்லாம வீட்டுக்கு வந்தா வீட்லயும் நிம்மதி இல்ல. அத பண்ணாத இத பண்ணாதன்னு சொல்றாங்க அரையாண்டு லீவ்ல நான் ஒரு படத்துக்குக்கூட தியேட்டர்க்கு போகல தெரியுமா.

அய்யய்யோ ............ முக்கியமான ஒரு விசயத்த சொல்ல மறந்துட்டேனே. அரையாண்டு கேள்வி பதில எழுத்திட்டு வர சொன்னாங்க . புக்கே தொடாம லீவ்ல ஜாலியா இருக்கலாம்னா இத வேற எழுதணும். அதுல பாதி நல்ல வேல நான் ஹாஸ்டல்ல எழுதிட்டேன். இன்னும் பாதி இருந்தது எப்படியோ அந்த கொடுமையும் எழுதி முடிச்சிட்டேன்.

இப்ப அம்மாக்காக இந்த கட்டுரைய எழுதுறேன். கண்ணமூடி கண்ண திறக்கறதுக்குள்ள 10 நாள் லீவ் போய்டுச்சி. ஒவ்வொரு நாளும் ராத்திரி படுக்கும் போது இன்னும் 5 நாள் தான் இருக்கு , 4 நாளு , 2 நாளுதான் இருக்குன்னு வேதனையோடு தான் தூங்குவேன். நான் எதிர்ப் பார்த்த அந்த பயங்கரமான நாள் வந்தது. ஆமாம் 4 லாம் தேதி வந்துடுச்சி. அதுக்குள்ளே எப்படி வந்துச்சினே தெரில. 3 ஆம் தேதி நெனச்சேன் 4 லாம் தேதி வரவே கூடாதுன்னு. ஆனா வந்துருச்சே என்ன செய்ய பள்ளிக்கூடத்துக்கு போகணுமே கெளம்பிட்டேன் சோகத்தோட.

எந்த சந்தோசமும் அனுபவிக்கல . அதுக்கு மேல ஒரு வருத்தம் . ஒரே ஒரு படம் மட்டும் தான் பார்த்தேன் தெரியுமா

அரையாண்டு லீவ் எப்படி போச்சுன்னு அம்மா எழுத சொன்னாங்கல்ல. அத சொல்ல ஒன்னும் இல்ல . எப்படியோ அம்மாவோட ஆசைய பொங்கல் லீவ்ல நிறைவேத்திட்டேன். 4 லாம் தேதி அம்மா என்னை பஸ் ஏத்தும் போது சொன்னாங்க. அரையாண்டு பேப்பர் கொடுப்பாங்க சொர்ணா. மார்க் கம்மியா இருந்தா வருத்தப்படாத நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் அடுத்த பரிச்சைல அதிகமா மார்க் எடுத்துரலாம் ன்னு சொன்னாங்க.

நான் அம்மாவிடம் சிரித்துக்கொண்டே சொன்னேன் . அத வருத்தப்படுரவங்கக்கிட்ட சொல்லுங்க. நானாவது வருத்தப்படுரதாவது !!!
கணக்குல 36 மார்க். இவ்வளவு எப்படி எடுத்தேன்னு எனக்கே தெரில. 80 , 85 , 90 மார்க் எடுத்த பிள்ளைங்க எல்லாம் அழுவுது. நான் மட்டும் சிரிச்சிக்கிட்டே இருந்தேன் ஏன்னா................. நான் பாஸ் ஆய்ட்டேன். அடுத்த பரிச்சைல நான் எப்படியும் 40 மார்க் எடுத்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு.

கணக்கு பாடத்த பாடத்திட்டத்துல இருந்து எடுத்துடனும். எல்லா பாடத்துலயும் 80 மார்க்குக்கு மேலதான் எடுப்பேன். இந்த வீணாபோன கணக்குல 40 எடுக்குறதே கஷ்டமா இருக்கு. ஆமாம் உங்களுக்கு .............................????????

அனைவருக்கும் ஏன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .



வியாழன், 14 ஜனவரி, 2010

என் அக்கா


என் அக்கா 8.1.2006 - 10.1.2006 வரை கைடு கேம்ப் பொய் இருந்தாள் . அக்கா இல்லாமல் எட்டாம் தேதி அன்று நான் தூங்கவில்லை. அக்கா எப்போது வருவாள் என்று அம்மாவிடம் கேட்டேன் அம்மா 10 ஆம் தேதி அன்று வருவாள் என்று சொன்னாங்க. அக்கா இல்லாமல் சிறிது நேரம் கூட உறங்கவில்லை. எப்ப நான் தூங்கனேன்னு எனக்கு தெரில தூங்கிட்டேன் . அதே நேரம் என் அக்கா என்கூட இருந்தா உடனே தூங்கிடுவேன். என் அக்கா என்கூட இருந்தா அவள நோண்டிக்கிட்டே இருப்பேன். என் அக்கா என்னைத் திட்டுவதற்கு ஒரு வார்த்தைக் கண்டுபிடித்து இருந்தாள் . அது என்னன்னு சொல்றேன் கேளுங்க

ஒரு தடவை நான் அவளை நோண்டினால் ஏய் .. என்று சொல்லுவாள் . இரண்டாவது முறை நோண்டினால் ஏய் ................. என்று இழுப்பாள். மூன்றாவது முறை நோண்டினால் அம்மா பாருமா என்று தூங்கிக்கொண்டிருந்த அம்மாவை எழுப்புவாள். அதற்கு என் அம்மா நீ ஆச்சி , அவளாச்சி என்று கூறுவாள். இன்னொரு முறை நோண்டினால் ஏய் சனியனே .... என்று திட்டுவாள். எப்படியோ சண்ட போட்டுட்டே தூங்கிவிடுவோம். என் அக்காவுக்கு சனியன் பிடிச்சி இருக்குன்னு நினைக்கிறேன். அதான் ஆவூனா சனியன்னு சொல்லி திட்றா. இப்படிப்பட்ட அக்காவைப் பார்த்தால் நீங்க திட்டுவிங்கதான?. ஆனால் , நான் ஒரு நாள் கூட அக்கா இல்லாம இருந்தது இல்ல. என் அக்கா என்னைத் திட்டினால் நானும் திட்டுவேன் . ஆனாலும் அக்காவை மறக்க மாட்டேன். என் அக்கா எனக்கு சிரிப்பும் காட்டுவாள்.

ஆனால் மூன்று நாட்கள் என் அக்கா என்னை தனியே விட்டுவிட்டு கேம்ப் போய்விட்டாள். என் அக்காவை விட்டு பிரிந்து இருக்க என்னால் முடியவில்லை. வீட்டில் இருவரும் பாடல் பாடிக்கொண்டு இருப்போம். என் அக்கா என்னைத் திட்டினாலும் இரவு எனக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாள். ஆனால் அதற்கு மட்டும் என் அக்காவை பிடிக்கும் என்று சொல்லவில்லை.

எனக்கு என்னவென்றே தெரியவில்லை ஆனாலும் என் அக்காவை எனக்கு மிகவும் பிடிக்கும் .

ஏங்கம்மா .....


இது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதியது.
( 12.2.2006 )

தற்பொழுது ஏங்கம்மா உயிருடன் இல்லை என் பாட்டி மறைவு நாள் 14.11.2006

(இதுகூட நான் குறும்பு தனத்தோடு எழுதியது பாட்டியைப் பற்றி புரியாமல் எழுதியது . நான் எழுதியதை என் பாட்டி ரசித்து படித்து , அனைவரிடமும் காட்டி மகிழ்ந்தார் )
ஏங்கம்மா என்பவர் ஒரு நியாயம் கேட்பவர் . தினாமும் என் வீட்டிற்கு வருவார். நான் இரவு ஆச்சி என்று சொல்லுவேன் . ஏன்னென்றால் அவர் வீட்டிற்கு செல்ல நேரம் ஆகிவிட்டது என்று நியாபகப்படுத்துவதற்காக. ஏன் என்றால் என் பாட்டி யாராவது நியாயம் பேச கூப்பிட்டால் உடனே சென்று விடுவார். அதுமட்டும் அல்லாமல் அவர் எங்களை குறை சொல்லுபவர் . என் வீட்டிற்கு வந்தால் டீ குடிப்பார் . டீ குடித்ததும் டம்ளர் கழுவமாட்டீர்களா என்று எங்களைத் திட்டுவார். என் அம்மாவையும் திட்டுவார் . மங்கை நீ புள்ள வளக்குறது சரி இல்ல . புள்ளைங்க இதுக்கூட செய்ய தெரியலன்னா என்ன புள்ள வளக்குற அப்படின்னு எங்க அம்மாவ திட்டுவாங்க .


தாத்தா தினமும் மார்க்கெட் போய் காய்கறியெல்லாம் வாங்கிட்டு வந்து பாட்டிக்கிட்ட குடுப்பாங்க . தாத்தா டீ போட்டு தருவார், சமைப்பார் . சனி , ஞாயிறு எற்கார்டு செல்வார் கல்லூரியில் பாடம் நடத்த . அந்த இரண்டு நாள் தான் தாத்தாக்கு நிம்மதி ( பாட்டி இறந்த பிறகு தாத்தா செல்வதில்லை )

தாத்தா எங்களைக் கொஞ்சுவார். அவருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் . ஏங்கம்மாவுக்கு குழந்தைகளை குறை சொல்ல தான் பிடிக்கும் அதுக்கு தான் தேவை இல்லாமல் எங்களைத் திட்டுவார் . எங்க அம்ம்மாவ திட்டினாக்கூட பரவால குழந்தைகளான எங்களைத் திட்டலாமா

ஆனால் இப்பொழுதுதான் எனக்கு தெரிகிறது என் பாட்டி நாங்கள் நல்ல பிள்ளைகளா உருவாகனும்னு தான் எங்கள திட்டி இருக்காங்கன்னு புரியுது

என் அம்மா .....


இது என் அம்மாவை பற்றி நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது.

எனக்கு என் அம்மா நான் போகும் டான்ஸ் கிளாஸ் , டியூஷன் ஆகியவற்றிற்கு பணம் கொடுப்பாங்க . சாயங்காலம் நான் வந்ததும் எனக்கு டீ வெச்சி குடுப்பாங்க. நான் வேண்டாம்னு சொன்னால் சரி போ சந்தோசம்னு சொல்லுவாங்க . இப்படிப்பட்ட அம்மாவை நீங்க எங்கயும் பார்க்க முடியாது. தான் மட்டும் சாப்பிட்டால் போதும் என்கிற அம்மாவை எங்கயாவது பார்த்து இருக்கீர்களா ?

இரவில் சாப்பாடு எனக்கு சாப்பாடு போடுவாங்க நான் வேண்டாம் என்றால் சரி போ சந்தோசம்னு சொல்லுவாங்க. காலைல நான் நான் ஸ்கூல்க்கு கிளம்பும்போது சாப்பாடு போடுவாங்க. நான் ஸ்கூல்க்கு ரெடி பண்ணிட்டு சாப்பிட உட்காருவேன் திடிர்னு எனக்கு சாப்பாடு வேண்டாம் டைம் ஆச்சின்னு சொல்லுவேன் . உடனே எப்பவும் போல அம்மா சரி சந்தோசம்ன்னு சொல்லுவாங்க

இதன்மூலம் என் அம்மா உங்கள் அம்மாவாக இருந்தால் அவளை நீங்கள் உங்கள் அம்மா என்று சொல்லுவீர்களா ? இருந்தாலும் இப்படிப்பட்ட அம்மாவை என்னால் மறக்கமுடியாது , அவள் இல்லாமல் என்னால் இருக்கவும் முடியாது .
தினமும் நான் செய்யும் அனைத்து செயல்களும் என் அம்மாவையே நியாபகப்படுத்தும்.


( இது நான் ஐந்தாவது படிக்கும் போது என் அம்மாவைப்பற்றி குறும்புத்தனத்தோடு எழுதியது )

தண்ணீருக்காக நான் தவித்த சோகக்கதை


காக்கா தண்ணீருக்காக அலஞ்ச கதைய நீங்க எல்லாரும் கேட்டு இருப்பிங்க . ஆனால், நான் தண்ணீருக்காக அலஞ்ச கதைய இதுவரை கேட்டு இருக்கமாட்டிங்க . சொல்றேன் ......... கேளுங்க


இது நான் ஐஞ்சாவது படிக்கும் போது நடந்தது ( 3.12.2005 ) . அன்னைக்கு காலைல ஸ்கூல்க்கு கெளம்பிட்டு இருந்தேன். வீட்ல வாட்டர் கேன் தேடி தேடி பார்த்தேன் எங்கயுமே இல்ல. அதனால நான் வசந்தி பாட்டி வீட்ல போய் வாட்டர் கேன் வாங்கிட்டு வந்தேன் . எங்க அக்கா எனக்கு வாட்டர் கேன்ல தண்ணீர் பிடிச்சி தந்தா. என் ஆட்டோ வந்துடுச்சி அவசரத்தில் நான் வாட்டர் கேனை விட்டுட்டு ஆட்டோல ஏறிட்டேன் .

காலைல எல்லா பிள்ளைங்கக்கிட்டையும் தண்ணி கேட்டேன் யாருமே தரல தெரியுமா . அஸ்வினி என்ற பிள்ளை மட்டும் கொஞ்சூண்டு தந்தா . காலைல இன்டர்வெல் பெல் அடிச்சது . அப்பவும் யாரும் எனக்கு தண்ணி தரல எல்லாரும் எனக்கு சாயங்காலம் வரைக்கும் வேண்ணும்னு சொல்லிட்டாங்க . மதியம் ரெண்டு பேர் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் குடுத்தாங்க அதும் நான் எத்தன முறை கேட்டேன் தெரியுமா? அதுக்கு அப்புறம் தான் குடுத்தாங்க . மதியம் இண்டர்வேள்ளையும் யாரும் தரல .

மதியானத்துல இருந்து சாயங்காலம் வரைக்கும் நான் தண்ணி குடிக்கல . சாயங்காலம் டான்ஸ் கிளாஸ்ல பிரியான்னு ஒரு பிள்ளகிட்ட கொஞ்சூண்டு தண்ணீர் வாங்கினேன் . என்ன போல நீங்களும் வாட்டர் கேனை வீட்ல வெச்சிட்டு போய் கஷ்டப்படாதிங்க பிளஸ்

களப்பயணம்


நாங்கள் களப்பயணம் இன்று போகிறோம் என்று வகுப்பு ஆசிரியை சொன்னார். காலை தமிழ் பாடம் பாதி நடத்திவிட்டு எல்லோரும் ஒவ்வொரு பெஞ்சாகப் போய் சாப்பாட்டுப்பை எடுத்து வாங்க என்று சொன்னார். எல்லோரும் அசம்பளிக்கு நிக்கற மாதிரி நில்லுங்கள் என்று ஆசிரியர் சொன்னார். மூன்று பேராக நில்லுங்கள் என்று சொன்னார்.


அப்போது நான், ஹேமா, ப்ரியா மொன்று பேரும் நின்றுகொண்டோம் . எல்லோரும் வரிசையாக நடங்கள் என்று சொன்னார். அப்போது ஒரு மாணவி கிழே விழுந்துவிட்டாள், அதை பார்த்து நானும்,ஹேமாவும் சிரித்துக்கொண்டே நடந்தோம் . சிஸ்டர் ,டீச்சர் எல்லோரும் எங்களோடு களப்பயணம் வந்தார்கள் . சிஸ்டர் எங்ககிட்ட எல்லோரும் சந்தோசமா இருக்கீர்களா ? என்று கேட்டார். எல்லோரும் சந்தோசமா இருக்கோம் சிஸ்டர் என்று கோரசாக சொன்னோம் .


எல்லோரும் களப்பயண இடத்தை அடைந்தோம். நான் பிஸ்கட் கொண்டு போனேன் . நானும், ஹேமாவும் சிஸ்டர்க்கு சிறிது கொடுத்தோம் . பின் சிஸ்டர் எல்லோரும் போய் விளையாடுங்க என்று சொன்னார் .


திடீர்என்று இங்கு கூட்டிட்டு வருவாங்கன்னு நானும், ஹேமாவும் நினைக்கல. என்ன விளையாட்டு விளையாடுறதுன்னு எங்களுக்கு தெரில. நானும், ஹேமாவும், மோகன ப்ரியா என்றபொண்ணும் ஓடி பிடித்து விளையாண்டோம்.


போர் அடிச்சது. எனக்கும், ஹேமாக்கும் பசிச்சது எப்படா சாப்பாடு சாப்பிடுவோம் ,எப்படா பள்ளிக்கு போவோம் என்று இருந்தது . அப்ப எங்க நல்ல நேரம் சிஸ்டர் எல்லோரும் சாப்பிட வாங்க என்று கூப்பிட்டார் . அப்பாடா ....... என்று மூச்சிவிட்டோம் . சாப்பிட்டு விட்டு எல்லோரும் உட்காருங்கள் என்றார் .


யாருக்கு பாட்டு பாட தெரியுமோ? அவங்க எல்லாம் வாங்கன்னு கூப்பிட்டார். எல்லோரும் உட்கார்ந்தோம் . நான், ஹெமாகிட்ட ஏய்..... எனக்கு கஜினி படத்துல இருந்து சுட்டியும் விழி சுடரே பாட்டு தெரியும் என்று சொன்னேன். போய் பாடு. ப்ளீஸ் ப்ளீஸ்டி....... எனக்காக்க இதுகூட பண்ணமாட்டியா என்று சொன்னாள். வேற வழி இல்லாமல் சரி என்று நானும் போய் பாடினேன் .


சிஸ்டர் , '' செய்யுள மனப்பாடம் பண்ணலனாலும் பாட்ட மனப்பாடமா வெச்சி இருக்க '' என்று சொல்லி கைதட்டினார் . ஏய் ..... பார்த்தியா நான் சொனதால தான சிஸ்டர் உனக்கு கை தட்டினார் என்று சொன்னாள் ஹேமா. அவளுக்கு நன்றியை சொன்னேன் .


அப்புறம் எல்லோரும் சர்ச்க்கு போனோம். அப்போது ஹேமா என்னை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தாள் , நானும் அவளைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தேன் . அப்போது, சிஸ்டர் என்ன சத்தம்டி என்று கேட்டார். சாரி சிஸ்டர் இனிமேல் சத்தம் போடா மாட்டோம் என்று சொன்னோம் .


ஒவ்வொருவரும் வரிசையாக வந்தோம் அப்போதே சிரித்துக்கொண்டே வந்தோம் . மீண்டும் முதலில் கிழே விழுந்த அதே பெண்ணே மீண்டும் கிழே விழுந்தாள் அதனால் நாங்கள் மீண்டும் சிரித்துக்கொண்டே ஸ்கூல்க்கு வந்தோம் . அப்புறம் சிஸ்டர்க்கு நன்றி கூறினோம்


( இது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது - 28.1.2006 )